Header Ads

Breaking News
recent

தேனி நியூட்ரினோ மையம் அறிவியல் ஆராய்ச்சிக்கு அவசியம்: - ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் - வெ.பொன்ராஜ்

நம் பேரண்டத்தில் காணப்படும் மிகப் பெரும்பாலான பருப்பொருட்களில், தொலைநோக்கிகள் மூலமாக காணமுடியாத பருப்பொருள் தான், இருள் பொருள் (Dark matter) என்பது. கண்ணுக்கு தெரியாத இருள்பொருளின் இருப்பு மற்றும் அதன் பண்புகள் என்பது கண்ணுக்கு புலப்படும் பருப்பொருளின் மீதான அதன் ஈர்ப்பு தன்மை சார்ந்து தான் அறிகிறோம். இன்றைய வான் இயற்பியல் (Astrophysics) ஆராய்ச்சியில் மிகப்பெரிய புரியாத புதிராக இருப்பது, நியூட்டிரினோ உட்பட, கண்ணுக்கு புலப்படாத இதுவரை நேரடியாக கண்டறியப்படாத சூடான இருள்பொருள் தான். இந்த இருள்பொருள் எவ்வித ஒளியையும் உமிழாது, வேறு ஏதேனும் மின் காந்த கதிரியக்கத்தையும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவில் வெளிப்படுத்தாது.


சிறிய பகுதி:


பிளாங் பிரபஞ்ச சர்வே மதிப்பீட்டின் படி, பேரண்டஇயலின் இதுவரை அறிவியல் ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டு தரப்படுத்தப்பட்ட அறிவியல் மாதிரியான பேரண்டவியலின் அடிப்படையில், பேரண்டத்தின் பெருந்திரள் சக்தியில் (Mass Energy of the known universe) 4.9 சதவீதம் பரும்பொருளாலானது (Ordinary matter), 26.8 சதவீதம் இருள் பொருளானது (Dark matter), 68.3 சதவீதம் இருள் ஆற்றலால் ஆனது (Dark Energy). எனவே, பேரண்டத்தின் மொத்த பெருந்திரள் சக்தியில் இருள்பொருளும், இருள் ஆற்றலும் இரண்டும் சேர்ந்து, 95.1 சதவீதமாகும். எனவே, இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும், நமக்கு தெரிந்த, வெறும் 4.9 சதவீத பருப்பொருளை, கண்டுணர்ந்து அதைப் பற்றிய ஆராய்ச்சியின் விளைவாகத் தான் பிறந்தது. பிரபஞ்சத்தின் சிறிய ஒரு பகுதியை ஆய்ந்து அறிந்து மனிதன் மேற்கொண்ட அறிவியலின் ஆராய்ச்சி, இந்த மனித குலத்திற்கு வழங்கிய மாபெரும் படைப்புகள் தான், இன்றைய நவீன உலகத்தை மலரச் செய்தது, மென்மேலும் வளர வழி நடத்துகிறது.


இன்று நடக்கிற அறிவியல் ஆய்வுகள், அண்ட வெடிப்பில் உருவான கோள்கள் மூலம் கண்டறியப்பட்டு நடைமுறையில் தரப்படுத்தப்பட்டுள்ள அறிவியல் அடிப்படை கோட்பாடுகளை தாண்டி, வேறு ஏதாவது சூழ்நிலையில் வேறு மாதிரியான அறிவியல் அடிப்படை கோட்பாடுகள் இருக்குமா? அப்படி இருந்தால், அதைப் பற்றி கண்டறிய முடியுமா? அப்படி கண்டறிந்தால் என்ன மாதிரியான அறிவியல் மாற்றங்கள் இந்த மனித சமுதாயத்திற்கு பயன்படும் என்பதை கண்டறிவதற்கான ஆராய்சிகள்தான், அடிப்படை துகள்களை பற்றிய ஆராய்ச்சிகள் ஆகும். இப்படிப்பட்ட அடிப்படை அறிவியலை பற்றிய ஆராய்ச்சியில், எந்த நாடு அதிக கவனம் செலுத்துகிறதோ, அந்த நாடு தான் தன் சமூகத்தை அறிவார்ந்த சமூகமாக உயர்த்தும் முயற்சியின் முதல் படியில் இருக்கிறது என்று அர்த்தம்.

வாய்ப்பு கிடைக்க வேண்டும்:


இப்படிப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி உலகம் முழுவதும் வளர்ந்த நாடுகளில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது, இந்த அடிப்படை ஆராய்ச்சியில் இந்தியாவும் ஈடுபட வேண்டும். இந்திய மாணவர்களுக்கு அப்படிப்பட்ட ஆராய்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நானும், என் நண்பர் பொன்ராஜும், உலகில் உள்ள பல்வேறு ஆராய்ச்சி நிலையங்களுக்கு பயணம் செய்து, அதன் பயனாக இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும், இந்த நியூட்ரினோ ஆய்வு அடிப்படை அறிவியலுக்கான ஆய்வு என்பதாலும், இந்த கட்டுரையை தமிழ் மக்களுக்கு விரிவாக விளக்கி, அவர்களின் நியாயமான சந்தேகங்களை போக்க வேண்டும் என்ற காரணத்தினால் தமிழில் எழுதுகிறோம். துகள் ஆராய்ச்சி நிலையங்களில் எங்கள் பயண அனுபவம். (LHC visit and Fermi lab visit) நாங்கள் இருவரும், ஹிக்ஸ் போஸான் என்ற கடவுள் துகளை கண்டுபிடித்து உலகிற்கு வெளிப்படுத்திய சுவிட்சர்லாந்தில் உள்ள CERN laboratoryக்கு சென்றிருந்தோம். அங்குதான் Large Hadron Collider (LHC) உலகின் மிகப்பெரிய மற்றும் மிக சக்தி வாய்ந்த துகள் முடுக்கி உள்ளது. அது அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பினால் கட்டப்

பட்டது (CERN). இது நிலத்திற்கு அடியில், தரைக்கு கீழே, 50 முதல், 175 மீட்டர் ஆழத்தில், 17 மைல் நீளத்தில் (27 கிலோ மீட்டர்) மிகப்பெரிய வட்ட சுரங்கப்பாதையில் அமைந்துள்ளது. இது சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் எல்லை கீழே உள்ளது. 100 நாடுகளில் இருந்து, 10 ஆயிரம் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள், இணைந்து இந்த திட்டத்தில் பணியாற்றுகின்றனர்.

இதை கட்டியெழுப்ப, 10.4 பில்லியன் சுவிஸ் பிராங்குகள், அதாவது, 64 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். அது இப்போது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான சோதனை ஆராய்ச்சி மையம் ஆகும்.


இந்த மையம் பெருவெடிப்பு ஆராய்ச்சியில் புரோட்டன் முதலிய ஹட்ரோன்ஸ் (Hadrons) முடுக்கி ஒன்றுடன் ஒன்று துகள்களை மோதவிட்டு ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது. இதன் மூலம் பிரபஞ்சத்தில் ஹிக்ஸ் போஸான் என்ற கடவுள் துகள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கண்ணுக்கு தெரியாத ஹிக்ஸ் புலம் (Higgs Field) பீல்டு பேரண்டத்தில் இருப்பதை கண்டறியப்பட்டிருக்கிறது.அந்த புலத்தில் எந்த துகள் செல்கிறதோ, அந்த துகளுக்கு நிரை கிடைக்கிறது. இதன் மூலம், பேரண்டம் உருவாகியது குறித்த மற்றும் அடிப்படை துகளின் பண்புகள் ஒழுக்கம் முதலியவை குறித்த ஸ்டாண்டர்ட் மாடல் எனும் அறிவியல் கருதுகோள் மெய்த்தன்மை மேலும் உறுதிப்பட்டு உள்ளது. இதுபோன்ற மற்றொரு முயற்சி... நாளை.

ஆ.ப.ஜெ.அப்துல்கலாம்

11வது இந்திய குடியரசுத் தலைவர்

[apj@abdulkalam.com]

வெ. பொன்ராஜ்

டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர்

[vponraj@gmail.com]
நன்றி: தினமலர்

No comments:

Powered by Blogger.