மதுரைக் காமராசர் பல்கலைக்கு நாக் குழு ஏ கிரேடு அங்கீகாரம்
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்துக்கு 3-வது சுழற்சி ஆய்வுக்கு வந்த நாக் குழு ஏ கிரேடு அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டில் சில பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் ஆற்றல்சார் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. ஏற்கனவே, 99-ம் ஆண்டு முதல்சுழற்சி ஆய்வு மேற்கொண்ட நாக் குழு இப்பல்கலைக்கழகத்துக்கு 4 ஸ்டார்களை வழங்கி கௌரவித்தது. 2006-ம் ஆண்டு நடைபெற்ற நாக்குழுவின் 2-வது சுழற்சி ஆய்வில் ஏ கிரேடு அந்தஸ்து முதல் முறையாக வழங்கப்பட்டது. தற்போது, 3-வது சுழற்சி ஆய்வுக்காக நாக் குழு மே 6-ம் தேதி முதல் மே 9-ம் தேதி வரை ஆய்வு மேற்கொண்டனர். பாண்டிச்சேரி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், சிறந்த கல்வியாளருமான அனில்பட்நாகர் தலைமையிலான 10 பேர் கொண்ட கல்வியாளர் குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழகத்தின் அனைத்துப் புலங்கள், துறைகளின் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தினர்.
ஆய்வு நிறைவு நாளில் பேசிய குழுத் தலைவர் அனில்பட்நாகர், நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் துணைவேந்தரின் சீரிய தொலைநோக்குத் திட்டங்களால் பல்கலைக்கத்தின் தரம் மேம்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு கல்வி வளர்ச்சித்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுத்துறையில் மேலும் சில வசதிகள் செய்யப்பட வேண்டும், என குறிப்பிட்டிருந்தார்.
ஜூலை11-ம் தேதி நாக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆய்வு அறிக்கை முடிவு வெளியிடப்பட்டது. அதில் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் ஏ கிரேடு அந்தஸ்தை வழங்கப்பட்டுள்ளது. மேலும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி ஆராய்ச்சிக்கு தகுந்த உள்கட்டமைப்பு வசதிகள் சிற்பபாக செய்து தரப்பட்டுள்ளன. வளாகத்தில் இன்டெர்நெட் வசதி முழுமையாக செய்யப்பட்டுள்ளது. பல்வேறு புலங்கள், துறைகளில் உலகத்தரம் வாய்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வுகளை விரிவுபடுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏ கிரேடு அங்கீகாரம் 2-வது முறையாக கிடைத்ததன் மூலம், ஆற்றல்சார் பல்கலைக்கழக நிலையிலிருந்து அடுத்தகட்ட உயர்நிலைக்குச் செல்வதற்கு உதவியாக அமையும். மேலும் பல உயர்கல்வி ஆய்வுக்கான நிதியுதவி தாராளமாக யுஜிசி மூலம் கிடைப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக, பல்கலைக்கழக வட்டாரத்தில் தெரிவிக்கப் பட்டது. பல்கலைக்கழகத்துக்கு ஏ கிரேடு அந்தஸ்து கிடைக்க தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்திய துணைவேந்தர் கல்யாணி மதிவாணனுக்கு ஆசிரியர், அலுவலர் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
No comments: