ஜூலை 18-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்த உள்ள தனியார் துறைக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் வெளியிட்ட அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூலை 18-ம் தேதி வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இம் முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்துக்கு தேவையான நபர்களை தேர்வு செய்கின்றனர்.
இம் முகாமில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படித்தவர்கள், 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ் டு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு அறிவியல், வணிகவியல் பயின்றவர்கள், பட்டயப் படிப்பு, ஐடிஐ படித்தவர்கள், பார்மஸிஸ்ட் படித்தவர்கள், டெக்னீசியன்கள், தூய்மை பணிகளை மேற்கொள்பவர்கள் பங்கேற்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இரு பாலரும் தங்களது கல்வி மற்றும் இதர சான்றிதழ்களுடனும், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடனும் ஜூலை 18-ம் தேதி இம் முகாமில் பங்கேற்கலாம். இம் முகாம் காலை 10 மணிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
No comments: