Header Ads

Breaking News
recent

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக கல்வி மாவட்ட வாரியாக சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த மையங்களுக்கு ஆகஸ்ட் 18 முதல் 26-ஆம் தேதி வரை நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.125, பதிவுக் கட்டணம் ரூ.50 ஆகும்.

ஏற்கெனவே நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த மையங்களில் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை விண்ணப்பதாரர்கள் கவனமாக வைத்திருக்க வேண்டும். அதிலுள்ள விண்ணப்ப எண்ணை வைத்தே தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்ய முடியும். ஏற்கெனவே பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பாடங்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகலை எடுத்து வர வேண்டும். படிப்பை பாதியிலேயே நிறுத்திய தேர்வர்கள் எட்டாம் வகுப்புத் தேர்ச்சி, ஒன்பதாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு படித்தமைக்கான மாற்றுச் சான்றிதழின் சுய சான்றொப்பமிட்ட நகல், எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சிக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும்.

அறிவியல் பாடங்களில் தேர்வு எழுதுவோர் அறிவியல் செய்முறைப் பயிற்சி முடித்ததற்கான அத்தாட்சி சான்றிதழை பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும்.

இப்போது சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் அனைத்துத் தேர்வுகளும் நடைபெறுவதால், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை சிறப்பு மையங்களில் ஒப்படைக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

No comments:

Powered by Blogger.