லண்டன் பல்கலையில் படிக்க உடுமலை அரசு கல்லூரி மாணவிகள் தேர்வு
உடுமலை அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் மற்றும் மாணவிகள் இருவர் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள கலைக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஒரு பருவம் படிக்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழக அரசு இவர்களை தேர்வு செய்து இலவசமாக பயில அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது.
இதன்படி, உடுமலை அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை கணிதத்துறை மாணவி எல்.ரேவதி, லண்டனில் உள்ள லெய்ஸ்டர் பல்கலைக்கழகத்திலும் இதே துறை மாணவி பொன்மலர், லீட்ஸ் பல்கலைக்கழகத்திலும் ஒரு பருவம் பயில தேர்வாகியுள்ளனர். ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் பிரிவில் தமிழகத்தில் இருந்து மொத்தம் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில், உடுமலை அரசு கலைக் கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவர் அ.வாசுதேவன், லண்டனில் உள்ள ஷெபீல்ட்ஹாலம் பல்கலைக்கழகத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இக் கல்லூரியில் இருந்து ஏற்கெனவே 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்துள்ளனர். கல்லூரி முதல்வர் ஆ.கிறிஸ்டினாள் மேரி சுகுணவதி மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் இவர்களை பாராட்டினர்.
No comments: