Header Ads

Breaking News
recent

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை


மாணவர்களின் போராட்டம் எதிரொலியாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவக்கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் தமிழகம் மற்றும் பிறமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படிக்கின்றனர்.

இங்கு அரசாணை 92-ன் படி தமிழக அரசு வழங்கியுள்ள சுமார் ரூ.48¼ கோடியை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக வழங்கவேண்டும், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் செலுத்தும் கல்வி கட்டணத்துக்கு அபராதம் கிடையாது என்ற அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும், மாணவர் விடுதியின் கட்டண தொகையை குறைக்கவேண்டும், மாணவர் தேர்தல் நடத்தவேண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவேண்டும் உள்பட 62 கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் அங்குள்ள பூமாகோவில் முன்பு போராட்டத்தை தொடங்கினர்.

அந்த மாணவர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் மாவட்ட வருவாய் அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாணவர்களுக்கு நிர்வாகம் கல்வி உதவித்தொகை வழங்கும் வரை எந்தவித கல்வி கட்டணமும் பல்கலைக்கழகத்துக்கு செலுத்தவேண்டியதில்லை என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் மாணவர்கள் தங்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று விடிய, விடிய போராட்டத்தை தொடர்ந்தனர். இதில் நூற்றுக்கணக்கான மாணவிகளும் பங்கேற்றதால் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், லாமேக், மீனா மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் 2-வது நாளான நேற்று காலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு உட்கார்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் பல்கலைக்கழகத்துக்கு நேற்று ஒருநாள் விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில் மாணவ பிரதிநிதிகளை பல்கலைக்கழக நிர்வாகிகள் பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். . ஆனால் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்காமல் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பல்கலைக்கழகத்துக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை விடப்படுவதாக நேற்று மாலை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து விடுதிகளை காலி செய்யும்படி மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனாலும் மாணவ- மாணவிகள் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Powered by Blogger.